சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற உள்ள நிலையில் பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 17ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் அடுத்து ஆட்சியில் அமரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் அக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்டார்.
சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், அவர் தனது எக்ஸ் பதிவில் , “தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் ‘மாற்றத்திற்கான புயல்’ நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக மாலை 7 மணிக்கு ‘தேர்தல் முடிவுகள்’ எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள், மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது! தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.
