தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் இன்று மே 10-ந் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவியேற்பு நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 118 எம்.எல்.ஏக்கள். விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்.
விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இப்போதும் நீடிக்கிற சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தந்துள்ளனர். இதனையடுத்து விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் நேற்று அழைப்பு விடுத்தார்.
இதனடிப்படையில் இன்று மே 10-ந் தேதி காலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் முதலமைச்சராக விஜய் (சி. ஜோசப் விஜய்) பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவரான கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் முறையாக இடம் கிடைத்திருக்கிறது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விஜய் பதவியேற்பு விழாவை ஒட்டி சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
இன்று முதல்வராக பதவியேற்கும் விஜய், வரும் 13-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
