மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், 8வது ஊதியக்குழுவின் சென்னை ஆலோசனைக் கூட்டங்கள் செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் பெறப்படுகின்றன.
என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும்?
இந்த ஆலோசனைகளில் அடிப்படை சம்பளம், ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட படிகள், பணிச்சூழல் மற்றும் பிற சேவை சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய ஊதியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் Fitment Factor மீது ஊழியர்கள் தரப்பில் அதிக கவனம் உள்ளது.
Fitment Factor எவ்வளவு?
2.15, 2.28, 2.57 என பல்வேறு Fitment Factor கணக்குகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகின்றன. ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்ல. 8வது ஊதியக்குழு தனது பரிந்துரையை வழங்கிய பிறகே இதுகுறித்த தெளிவு கிடைக்கும். 6வது ஊதியக்குழுவில் 1.86 ஆகவும், 7வது ஊதியக்குழுவில் 2.57 ஆகவும் Fitment Factor நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சம்பள உயர்வு மட்டும்தானா?
ஊழியர் அமைப்புகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையாக ஆண்டுதோறும் வழங்கப்படும் Increment தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் உள்ளது. தற்போது 3 சதவீதமாக இருக்கும் Increment-ஐ 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆலோசனைகளுக்குப் பிறகு செப்டம்பர் 9-ம் தேதி புதுச்சேரியிலும், செப்டம்பர் 16 முதல் 18 வரை சண்டிகரிலும், அக்டோபர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் பெங்களூருவிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
8வது ஊதியக்குழு 2025 நவம்பர் 3-ம் தேதி அமைக்கப்பட்டது. இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் தொடர்ந்து சேகரித்து வருகிறது.
