பிரான்ஸ் நாட்டின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான கேர்ஃபோர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய சந்தையில் கால் பதித்துள்ளது.
ஆனால், இந்த முறை முன்பு போல பிரம்மாண்டமான ஹைப்பர் மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பாமல், சிறிய கடைகள், ஆன்லைன் விற்பனை மற்றும் விரைவு வர்த்தகத்தையும் இணைத்து செயல்படத் திட்டமிட்டுள்ளது.
2014-ல் வெளியேறிய கேர்ஃபோர்
கேர்ஃபோர் கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. அப்போது மொத்த விற்பனை பிரிவில் 5 கடைகளைத் திறந்த நிறுவனம், 2014-ல் இந்திய செயல்பாடுகளை நிறுத்தியது.
தற்போது இந்தியாவின் சில்லறை சந்தை வேகமாக வளர்ந்துள்ள நிலையில், புதிய அணுகுமுறையுடன் கேர்ஃபோர் திரும்பியுள்ளது.
50 கடைகள் திறக்க திட்டம்
துபாயைச் சேர்ந்த Apparel Group நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை கேர்ஃபோர் தொடங்கியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் 50,000 சதுர அடி பரப்பளவில் முதல் கடை திறக்கப்பட்டுள்ளது. இதில் 15,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்ததாக டெல்லி-என்சிஆர் பகுதியில் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் சிறிய சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 கடைகளை அமைக்க நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. சந்தைக்கு ஏற்ப ஹைப்பர் மார்க்கெட், சூப்பர் மார்க்கெட், கன்வீனியன்ஸ் மற்றும் குர்மேட் ஸ்டோர் என வெவ்வேறு வடிவங்களில் கடைகள் அமைக்கப்பட உள்ளன.
Quick Commerce-லும் கேர்ஃபோர் களம் இறங்கும்
இந்தியாவில் Blinkit, Reliance, DMart உள்ளிட்ட நிறுவனங்கள் வலுவாக இருக்கும் நிலையில், கேர்ஃபோர் வெறும் நேரடி கடை விற்பனையுடன் நிற்கப் போவதில்லை.
எதிர்காலத்தில் e-commerce மற்றும் Quick Commerce சேவைகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் தனி Dark Store அமைப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள கடைகளையே ஆன்லைன் ஆர்டர்களை நிறைவேற்ற பயன்படுத்துவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்திய பொருட்களுக்கு சர்வதேச சந்தை
இந்தியாவை விற்பனை சந்தையாக மட்டுமல்லாமல், உலகளாவிய கொள்முதல் மையமாகவும் பயன்படுத்த கேர்ஃபோர் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவு மற்றும் பிற Private Label பொருட்களை எதிர்காலத்தில் GCC நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
இந்த முறை வேகமாக கடைகளை அதிகரிப்பதைவிட, லாபகரமான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கேர்ஃபோர் தெரிவித்துள்ளது.
