அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், ”ஈரானில் உள்ள முக்கியமான நிலத்தடி அணுசக்தி தளமான பிக்ஆக்ஸ் மவுண்டனை (Pickaxe Mountain) மிக விரைவில் தாக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிக்ஆக்ஸ் மவுண்டனில் ஏதேனும் செயல்பாடுகள் நடைபெறுவது தெரியவந்தால், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
“பிக்ஆக்ஸில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அங்கு ஏதேனும் தவறான செயல்பாடு இருந்தால், கடுமையாக தாக்குவோம்” என்ற வகையில் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நடான்ஸ் அணு நிலையத்துக்கு அருகில்
பிக்ஆக்ஸ் மவுண்டன், ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் மையமான நடான்ஸ் அணு நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நிலத்தடி சுரங்கத் தொகுதிகளை இந்த வளாகம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வழக்கமான வான்வழித் தாக்குதல்களால் இதை சேதப்படுத்துவது சவாலானதாக கருதப்படுகிறது.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது
ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை தடுப்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக ஈரான் அணு ஆயுதம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், ஈரானுடனான மோதல் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார். பிக்ஆக்ஸ் மவுண்டன் மீதான புதிய எச்சரிக்கை, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
