Media Conspiracy to Break TVK-Congress Alliance: தமிழக வெற்றிக் கழகம்- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க சில பத்திரிகையாளர்கள், சில பத்திரிகை குழுமங்கள் சதி செய்வதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று (செப்டம்பர் 5) மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அமைச்சர் அருண்ராஜ் இன்று வருகை தந்தனர். தவெக தலைவரும் முதல்வருமான விஜய் செப்டம்பர் 9-ந் தேதி ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளார். அது கூட்டணி கட்சித் தலைவர்களின் 2-வது கூட்டம்.
தவெக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல் கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. இம்முறை தவெக அலுவலகத்தில் செப்டம்பர் 9-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
விஜய் கூட்டியுள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். இந்த கூட்டணிக்கு பெயர் வைத்து, இந்த கூட்டணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதே நேரத்திலே மதச்சார்பற்ற சமூக நீதி அடிப்படையில் இருக்கின்ற இந்த கூட்டணி பலமான கூட்டணியாக அமைய வேண்டும். இது தமிழகத்தினுடைய அனைத்து பிரச்சனைகளிலும் ஒருமித்த கருத்தை உருவாக்குகிற கூட்டணியாக இருக்க வேண்டும்.
ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்
2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிரதமர் வேட்பாளர். தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விஜய் இப்போதுதான் நிறைவேற்ற தொடங்கி இருக்கிறார்.
பத்திரிகையாளர்கள் சதி
இந்த பிரச்சனையில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம். ஆனால் பத்திரிகையாளர்களும் மற்றவர்களும்தான் இதில் மிக ஆர்வமாக உள்ளனர். பத்திரிக்கையாளர்களில் சிலர், சில குழுமங்கள் இப்படி விரிசல்களை (தவெக- காங்கிரஸ்) மதச்சார்பற்ற கூட்டணியில் உருவாக்க பாடுபடுவதை பார்க்கிறோம். இந்த முயற்சிகள் தோல்வி அடையும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
