பழைய டீசல் வாகனங்களை உடனடியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தை குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
BS-III மற்றும் BS-IV தரத்தில் இயங்கும் பழைய லாரிகள், பேருந்துகளில் ரூ.4,000 முதல் ரூ.5,000 செலவில் சிறிய மாசுக் கட்டுப்பாட்டு சாதனத்தை பொருத்தும் திட்டம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
IIT டெல்லி உருவாக்கிய சாதனம்
IIT டெல்லியின் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம், பழைய டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் நுண்துகள்கள் உள்ளிட்ட மாசுகளை கணிசமாக குறைக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாக கட்கரி கூறியுள்ளார்.
ரூ.5,000 செலவில் மாற்றம்
புதிய வாகனம் வாங்குவது அல்லது பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வது என்ற நிலைக்கு மாற்றாக, இந்த சாதனத்தை பொருத்துவது குறைந்த செலவிலான தீர்வாக அமையும். குறிப்பாக அதிக எண்ணிக்கையில் பழைய வாகனங்களை இயக்கும் லாரி மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
BS-VI அளவுக்கு மாசு குறையுமா?
சாதனம் பொருத்தப்பட்ட பிறகு BS-IV வாகனங்களின் வெளியேற்ற மாசு BS-VI வாகனங்களின் அளவுக்கு நெருக்கமாக குறையும் என கட்கரி தெரிவித்துள்ளார். நுண்துகள் மற்றும் NOx போன்ற மாசுகளையும் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பழைய வாகனங்களை முழுமையாக மாற்றுவதற்கான செலவு இல்லாமல் அவற்றின் மாசு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், சாதனத்தின் தரம், பொருத்தும் நடைமுறை மற்றும் அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகள் முக்கிய பங்கு வகிக்கும்.
