திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளை ஏற்பது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தெரிவிக்க இருக்கிறோம் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 6 அல்லது அதற்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்டது சிபிஎம். ஆனால் திமுக, 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்றது.
இதனையடுத்து குறைந்தபட்சம் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுக தமது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான குழு நேற்று சந்தித்து பேசியது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று சிபிஎம் மாநில செயற்குழு நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “இன்னைக்கு கூட்டத்துல எடுத்துள்ள முடிவு பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசுவோம்.
முதலமைச்சரை சந்திச்ச பிறகு தான் ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? இல்லையா? என சொல்ல முடியும்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறின்னு நாங்க நினைக்கல… நிறைய கட்சிகள் இருக்கக்கூடிய நிலையில ஒவ்வொரு கட்சியோடும் பேசி தீர்வு காணுவதற்கு கால அவகாசம் என்பது தேவைப்படக்கூடிய ஒரு விஷயம் தான். அதனால இழுபறின்னு சொல்லிக்கிறீங்க. இன்று முதலமைச்சரை சந்திப்போம், அதுக்கப்புறம் எங்களுடைய முடிவை தெரிவிப்போம். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.
