கருணாநிதி மீது பல தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட போதெல்லாம் அதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் வைகோ. பின்னர் திமுகவில் இருந்து பிரிந்து வந்து மதிமுகவைத் துவங்கிய பின்னரும் கூட கருணாநிதி மீது தனி மனித தாக்குதல் எதையும் வைகோ நடத்தியதில்லை.
ஆனால் இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆகி உள்ள வைகோ,இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேமுதிகவை விமர்சித்துவரும் சந்திரகுமார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் சந்திரகுமார் பேசும்போது கேப்டன் கட்டளையிட்டால் கிணற்றில் குதிக்கவும் தயாராக இருப்பதாக கூறியதாகவும் ஆனால் நான்கு நாட்களில் என்ன நடந்தது என வைகோ கேள்வி எழுப்பினார். தேமுதிகவை உடைக்க சந்திரகுமாருக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய வைகோ இது விஜயகாந்துக்கு அவர் இழைத்த பச்சை துரோகம் என்றார். இதைவிட சந்திரகுமார் வேறு தொழில் செய்யலாம் என வைகோ கடுமையாக விமர்சித்தார். கட்சிகளை உடைப்பது திமுகவுக்கு கைவந்த தொழில். கருணாநிதிக்கு இதுதான் வேலை என்று குறிப்பிட்ட வைகோ கருணாநிதி வேறு தொழில் செய்யலாம் என்று குறிப்பிட்டார். வேறு தொழில் என்று நான் சொல்லுவது விவசாயமாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆதிகாலம் தொட்டே அந்த வேறு தொழில் இருக்கிறது. அதை சிலர் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று சொல்லிவருகிறார்கள். கருணாநிதியும் அந்தத் தொழிலைச் செய்யலாம். நான் ஏதோ தவறாக சொல்வதாக நினைக்க வேண்டாம். அவருக்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய தொழிலும் தெரியும். உலகின் தலைசிறந்த இசை தமிழிசை.அதற்காக அண்ணன் கருணாநிதியை உயர்வாக சொல்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.சைகையோடு வைகோ சொன்னது கருணாநிதியின் குலத்தொழிலை, கூடுதலாக இன்னொரு தொழிலையும் இணைத்துச் சொன்னார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.வைகோவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.,”
