சித்ரா பௌர்ணமியை ஒட்டி வெள்ளியங்கிரி மலை ஏறிய 34 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். இந்த இடத்தை அடைய ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை வெள்ளியங்கிரி மலை ஏறிய ஒரு பக்தர் ஏழாவது மலையில் மயங்கி விழுந்தார். சுயநினைவு இழந்த நிலையில் இருந்த அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
உயிரிழந்தவரின் உடலை மலைக்கு கீழே கொண்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
