ரயில் பயணிகள் ஒரு நிமிடத்தில் 25,000 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ரயில் பயணிகளின் முன்பதிவு முறையை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அதில், டிக்கெட் எடுக்கும் முறையை முழுமையாக மேம்படுத்தும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது . அதன்படி ஹார்ட்வேர், சாஃப்ட்வேர், பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு 182 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தற்போது உள்ள திறனை விட 4 மடங்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அதாவது பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) மூலம் நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப பணிகள் முழுமை பெறும் பட்சத்தில் நிமிடத்துக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படலாம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரயில் ஒன் செயலியை பயன்படுத்தி பயணிகள் முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
