கோவையில் பிறந்து 11 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற சிந்து என்ற பெண்ணை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி விஜயசாந்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நான்காவதாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருப்பதால் 4-வதாக பிறந்த பெண் குழந்தையைத் தத்து கொடுக்க முடிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகமான சிந்து(32) என்பவர் குழந்தையைத் தத்து கொடுக்க உதவ முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பச்சிளம் குழந்தையை சிந்துவிடம் அவரது பெற்றோர் ஒப்படைத்தனர். ஆனால் சிந்து, சோமனூரை சேர்ந்த ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் விலைக்கு அந்த குழந்தையை விற்க முயன்றுள்ளார்..
இது குறித்த தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் பெண் குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்க முயன்ற சிந்துவை பிடித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தை தற்போது காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை விற்க முயன்ற சிந்துவை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் குழந்தையின் பெற்றோருக்குத் தெரிந்து இந்த விற்பனை நடைபெற்றதா? அல்லது குழந்தையின் பெற்றோரை ஏமாற்றி சிந்து குழந்தையை வாங்கி விற்பனை செய்ய முயன்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
