மதவாத சக்திகளும், சாதியவாத சக்திகளும் தான் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு எதிரிகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், “இவ்வளவு நாள் தயக்கம் இருந்தது… இன்று கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “கடந்த ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் நாங்கள் கலந்து கொண்டோம். அதில் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான கருத்து பரிமாறிக் கொள்ளப்பட்டது.. அடுத்த கூட்டத்தில் அதை இறுதி செய்வோம் என்று கூறியிருந்தோம். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறோம். தொடர்ந்து இந்த கோட்பாடுகளுக்காக பயணிப்போம்.” என்றார்.
திமுக கூட்டணிக்கும் இந்த கூட்டணிக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு, “வித்தியாசத்தை நீங்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் சமூக நீதி கொள்கைகளை கொண்டவைதான்” என பதில் அளித்தார்
முதலமைச்சரின் செயலை மனித விரோத செயல் என்று சொல்லி இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, “தோழமையோடு நாங்கள் சுட்டிக் காட்டினோம். கூட்டணியில் இருந்தாலும் அமைச்சரவையில் இருந்தாலும் நாங்கள் மதிக்கும் முதலமைச்சர் அனைத்து தரப்பு இயக்கங்களையும் தலைவர்களையும் மனிதாபிமானத்தோடு மனித மாண்புகளோடு அணுக வேண்டும் என்கிற கருத்தை பகிர்ந்து கொண்டோம்” என்றார்.
இந்த கூட்டணிக்கு எதிரி யார்? திமுகவா? என்ற கேள்விக்கு மதவாத சக்திகளும், சாதியவாத சக்திகளும் என்று கூறினார்.
