வேளச்சேரி மற்றும் கோயம்பேடு பகுதிகளில் நகரும் படிக்கட்டுகளுடன்கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இன்று (ஜூன் 25) நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலு 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில்,
- “உங்கள் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஒரு புறவழிச்சாலை, ஒரு நடைமேம்பாலம், 6 சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், 3 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ஒரு மழைநீர் வடிகால் கட்டுதல் ஆகிய பணிகளும் மற்றும் 6 புறவழிச்சாலைகள், ஒரு ஆற்றுப்பாலம் அமைக்க தேவையான நில எடுப்புப்பணிகளும் ரூ.1055 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள 9479 பாலங்களை ஆய்வு செய்து, அதன் உறுதித் தன்மையை கண்டறிந்து பழுதுகள் ஏற்பட்டிருப்பின் அதனை உடனுக்குடன் சீரமைக்க வேண்டியுள்ளது. இதனைச் செயல்படுத்த தனி கவனம் செலுத்தி நிபுணத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களைக் கொண்ட “பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு” ஒன்று நெடுஞ்சாலைத்துறையில் ஏற்படுத்தப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில், இதுவரை 577கி.மீ. நீளச் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மற்றும் 1710.. நீளச் சாலைகள் இருவழிச்சாலையாக மாற்றவும் பணிகள் எடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
- காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வெள்ளப் பெருக்கினை கையாளும் விதமாக, “அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்துத் திட்டம்” (Chief Minister All Season Uninterrupted Connectivity Scheme) என்ற திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர் மட்டப் பாலங்களாக 2026 ஆண்டிற்குள் கட்டப்படும்.
- கடந்த மூன்று நிதியாண்டுகளில், தரைப்பாலங்கள் 1146 உயர் மட்டப் பாலங்களாக மாற்ற பல்வேறு திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பாண்டில் உட்கட்டமைப்பு ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 50 தரைப்பாலங்கள் ரூ.200கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலங்களாகக் கட்டப்படும். - விபத்தில்லா மாநிலம் என்ற இலக்கினை அடையவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக ரூபாய் 300கோடி மதிப்பீட்டில் சாலைச் சந்திப்புகள் மேம்பாடு செய்யப்படும்.
- தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர், திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களுக்குப் புறவழிச் சாலையும் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்புச் சாலையும் ரூ.321கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
- விரிவான திட்ட அறிக்கை பணிகள் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மணல்மேடு முதல் சேத்தியாத்தோப்பு வரை புதிய சாலை அமைக்கவும், மதுரை மாநகரில் சிட்டம்பட்டி முதல் தென்காசி சாலையில் உள்ள ஆலம்பட்டி வரை புதிய வெளிவட்டச் சாலை அமைக்கவும், விரிவான திட்ட அறிக்கை ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
- சென்னை பெருநகர மாநகரப் பகுதியில், வேளச்சேரி இரயில் நிலைய பேருந்து நிறுத்தம், சென்னை உள்வட்டச் சாலையில், கோயம்பேடு சந்திப்பு அருகே என 2 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன்கூடிய நடை மேம்பாலம் அமைத்தல் மற்றும் பள்ளிக்கரனை சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் வரை, உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயலாக்கப்படும்.
- நெடுஞ்சாலைத்துறையில் நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க ரூ.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளில், 600 கி.மீ. சாலைகள், ரூ.680 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டிஎன்பிஎஸ்சி, டெட், எம்.ஆர்.பி… இளைஞர்களுக்கு ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!