தள்ளிப் போகிறதா தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத் தொடக்கம்? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், முதல்வர் விஜய் வெளிநாடு செல்வதால் சற்றே தள்ளி வைக்கப்படுவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் விஜய் தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக லண்டன் செல்லவுள்ளார். வருகிற 10-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு, துபாய் வழியாக அவர் லண்டன் செல்ல உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் உள்ளபடி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டமான தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜய் அரசுமுறைப் பயணமாக லண்டன் செல்வதால் இந்தத் திட்டம் தள்ளி வைக்கப்படுவதாக என சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் வெளிநாட்டுப் பயணம் செல்வதால் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத் தொடக்க நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

ADVERTISEMENT

மேலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செப்டம்பர் 25-ஆம் தேதி திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “அதிகாரப்பூர்வமாக நாங்கள் தெரிவிக்க நினைத்தோம். உங்களுக்கே தெரிந்துள்ளது. அங்குதான் தொடங்க உள்ளோம். 916 ஹால்மார்க் மோதிரம்தான் கொடுக்க உள்ளோம். தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share