தமிழக சட்டசபையில் அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் நம்மாழ்வார் மற்றும் அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்ற விருது விவரங்கள்:

நம்மாழ்வார் விருது
5 சிறந்த உயிர்ம விவசாயிக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் “நம்மாழ்வார் விருது” வழங்கப்படும்.

வெற்றி விவசாயி விருது
மாவட்ட அளவில் ”வெற்றி விவசாயி விருதுகள்” வழங்கப்படும். முதல் பரிசு ரூ.50 ஆயிரத்துடன் தங்க பதக்கம்; 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்துடன் வெள்ளி பதக்கம் வழங்கப்படும்.
நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி ஆகியவற்றை குறைந்தபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக ”வெற்றி விவசாயி விருதுகள்” 9 பயிர்கள், 90 பரிசுகள், பரிசுத் தொகை ரூ.67.50 லட்சம் ஆகும்.

அஞ்சலை அம்மாள் விருது
மக்கள் சேவகர் “அஞ்சலை அம்மாள் விருது” – மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்கான விருது இது. முதல் பரிசு: ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம்; இரண்டாம் பரிசு: ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம்; மூன்றாம் பரிசு: ரூ. 1 லட்சம்.
சிறு, குறு விவசாயிகள்- கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை குறைந்தபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் ஆகியவற்றை குறைந்தபட்சம் 1 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும். 10 பயிர்கள், 30 பரிசுகள், பரிசுத் தொகை ரூ.50 லட்சம் ஆகும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்ப்செட்டுகள், 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கும் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டமும் ரூ.56.72 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வான்மகள் திட்டம்
ரூ.4 கோடியில், “வான்மகள்” திட்டம் என்ற பெயரில் 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு டிரோன் இயக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு உரிமம் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிரில் 50 சதவீத மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும்.
