முதல்வர் விஜய் அரசு டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.
இதற்காக டாஸ்மாக் நிறுவனம் (https://tasmac.tn.gov.in/) வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் ஆன்லைனில் மதுபானங்களை வாங்கும் முறை இடம் கூறப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பதாவது: டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் வாங்குவதற்காக https://tasmac.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ளே செல்ல வேண்டும்.

இந்த வெப்சைட்டில் நுழையும் போதே “Age Verification You must be 21 years or older to view and use this website” என இடம் பெற்றிருக்கும்.
21 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை உறுதி செய்த பின் ”Shop Locator & Stock Details Check Live Stock, and Find Nearby Stores Instantly” என்ற பக்கம் ஓபனாகும்.
Nearby Shops என்ற ஆப்சனை கிளிக் செய்தால் அருகே உள்ள டாஸ்மாக் அரசு மதுபான விற்பனை கடைகளின் இருப்பிடங்களை கூகுள் மேப் காட்டுகிறது. 1 கிமீ முதல் 25 கிமீ வரையில் எந்தெந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அருகே உள்ளன என்பதை காட்டுகிறது.
இந்த இணையத்தில் MRP Price List-ல் அனைத்து வகை ”BEER BRANDY RUM VODKA WHISKY WINE ” மதுபானங்களின் விலைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
அத்துடன் நாம் தேர்வு செய்த கடைகளில் உள்ள தற்போது விற்பனையில் உள்ள மதுபான விவரங்களையும் பார்வையிட முடியும். அந்த பட்டியலில் இருந்து விரும்பும் மதுபான ரகத்தை தேர்வு செய்த பின்னர் செல்போன் எண்ணை பதிவிட்டால் OTP வரும். இதன் பின்னர் ஆர்டரை உறுதி செய்ய ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் கட்டிய பின்னர் ரசீதை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
இந்த ரசீதை மொபைலில் சேமித்து வைத்து கொண்டு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்று கவுண்ட்டரில் உள்ள QR Code-ல் ஸ்கேன் செய்து மதுபானங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் டாஸ்மாக் விற்பனையாளர் இந்த QR Code முறையை எப்படி செயல்படுத்துவது என்கிற விளக்கமும் அதில் இடம் பெற்றுள்ளது.
VIDEO:
அன்புமணி கடும் எதிர்ப்பு
முதல்வர் விஜய் அரசின் ஆன்லைன் மதுவிற்பனைக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.
மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற இணையதளம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.
மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.
மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் உள்ள 35,039 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.
டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அவர்களுக்கு மது விற்கப்படுகிறது.
இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும். மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.
மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதேபோல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் விஜய் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
