லோகேஷ் கனகராஜ் யூனிவர்சலில் இணையும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று விஜய் தேவரகொண்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில், “லைகர்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் புரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 13) சென்னையில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில், நோட்டா படத்திற்கு பிறகு நேரடியாக தமிழ் படங்களில் நடிக்காதற்கான காரணம் குறித்தும், தமிழ் திரைப்படத்தில் நடித்தால் யாருடன் பணியாற்றுவீர்கள் என்றும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விஜய் தேவரகொண்டா, “லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் இயக்கத்தில் பணியாற்ற விரும்புகிறேன்.
அவர்களது படம் எனக்கு மிகவும் பிடிக்கும், அவற்றை நான் விரும்பி பார்ப்பேன். அவர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளேன்.

அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் அவர்களின் யூனிவர்சலில் இணையும் நாளுக்காக காத்திருக்கிறேன். அது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும், தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் எனது படங்கள் அனைத்தையும் தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகிறேன்” என்றும் கூறினார் விஜய் தேவரகொண்டா.
மோனிஷா
