வந்தே மாதரம் பாடல் சர்ச்சை.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு பதிலடி

Published On:

| By Mathi

Vande Mataram Controversy

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை (Vande Mataram Controversy) தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிக சட்டசபை குழுத் தலைவர் வன்னி அரசு எம்.எல்.ஏ. பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக வன்னி அரசு எம்.எல்.ஏ. தமது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்திய தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த சனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின் வரிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

பதவியேற்பு நிகழ்ச்சிகள், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் போதும், அந்நிகழ்விலிருந்து வெளியேறும் போதும், குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதும் வந்தே மாதரம் இசைக்கப்படலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது.

ஆனால் வந்தே மாதரம் பாடல் எங்கெல்லாம் பாடப்படலாம் என்று சொல்லப்படும் பகுதியில், அணிவகுப்பு, கொடியேற்றப்படும் நிகழ்வு, கலாச்சாரம் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதுடன் பாடப்படலாம்.

ADVERTISEMENT

ஆனால் குடியரசுத்தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் மட்டுமே பாடப்படலாம் என்று குறிப்பிடும் அறிக்கை, மற்ற எந்தவித நிகழ்வுகளையும் ‘May Be’ என்று தான் குறிப்பிடுகிறது. அதாவது மற்ற நிகழ்வுகளில் பாடுவது கட்டாயமானது அல்ல.

ஒரு நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பாடப்படுமாயின், முதலில் தேசிய பாடலான வந்தே மாதரம் தான் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிக்கையில் கடைசி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆக, ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படியும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டியதும் இல்லை.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆளுநருடன் இணைந்தே தமிழ்நாடு அரசும் இந்த அநீதியை அரங்கேற்றியதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய இனத்தின் அடையாளத்தையும் இறையான்மையையும் பாதுகாப்பது
தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் மிக முக்கியமான கடமையாகும். இவ்வாறு வன்னி அரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share