நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வியடைந்தது வேலை இல்லாமல் இருந்தேன். எனக்கு வேலையும் கொடுத்து காரும் கொடுத்திருக்கிறார் என்று பேரவையில் பேசி முதல்வர் விஜய்யின் கவனத்தை ஈர்த்த எம்எல்ஏ சபரி ஐங்கரனிடம் கார் உள்ளது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 12.08.2026 அன்று காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, பல எம்.எல்.ஏ.க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று தமிழக சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்; மாதந்தோறும் ரூ.75,000 வாகன படி, ரூ.25,000 உதவியாளர் படி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி.. வேலையும் இல்லை.. காரும் இல்லை.. இன்னைக்கு வேலையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.. காரும் கொடுத்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ஏனென்றால் நான் டிரெயின்லதா வருகிறேன்.. இங்கே உள்ளே ஆட்டோவில வருவேன்.. உள்ளே வரும் போது எல்லாம் பணியில் இருக்கிற காவலர்கள், “நீங்க யார்? என கேட்பார்கள்”, நான் எம்.எல்.ஏ.ன்னு சொல்வேன்.. ஐடி கார்டு எல்லாம் எடுத்து காண்பிச்சாலும் நம்பமாட்டார்கள் ..” என்றார். உடனடியாக அவையில் சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் விஜய் உடனடியாக தனது இருக்கையில் இருந்து திரும்பி எம்எல்ஏ வை பார்த்து சிரித்தார்.

இந்நிலையில் எம்எல்ஏ சபரி ஐங்கரனிடம் கார் உள்ளது. அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய Tata Tigor (TN 60 AK 7888) வாகனம் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

