தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால் மகாபலிபுரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. traffic stund tvk 2nd year function
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கான விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று (பிப்ரவரி 26) காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
எனினும் காலை 7.30 மணி முதலே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அப்போது தேர்தல் கூட்டணி, கட்சியின் கள செயல்பாடுகள் குறித்து விஜய் விரிவாக பேச உள்ளார்.
மேலும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் சென்னைக்கு வந்த கட்சியின் சிறப்பு ஆலோசகரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரும் உரையாற்ற உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த பவுன்சர்கள் விழா நடைபெறும் இடம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதலே கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ள நிலையில் மகாபலிபுரம் ஈசிஆர் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
