தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறையை முறைப்படுத்தவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின்’ (TNRERA) உயர்மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாக வசதிகளுக்காக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற சிவ்தாஸ் மீனா, கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் மற்றும் உறுப்பினர்கள் சுப்பிரமணியம், சுகுமார், சிட்டிபாபு ஆகியோர் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்வதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவர்களின் ராஜினாமா கடிதங்கள் தொடர்பாக அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை, இவர்கள் தங்களது பதவிகளில் தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், அபய் குமார் சிங் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் பதவி விலகி வருவது தமிழக அரசு மற்றும் சிவில் சர்வீஸ் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
