தமிழகத்தில் ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதல் மின் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது; இந்த 3.70 லட்சம் மின் இணைப்புகள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் அருண்ராய், அனைத்து தலைமை மின் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான வட்டங்களுக்கு அனுபிய சுற்றறிக்கையில், ஜூலை மாதத்தில் அதிக மின் கட்டணம் வந்ததாக பரவலாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகளைக் கொண்டு மறு ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
முந்தைய மே மாத கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலையில் அதிக வேறுபாடு உள்ள 3.70 இலட்சம் மின் இணைப்புகளுக்கு மறு ஆய்வு செய்யப்படும்.
இந்த ஆய்வுகள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த ஆய்வின் போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் தேவையான திருத்தங்கள் உடனுக்குடன் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த அதிகாரிகள் எவ்வளவு மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
