தாய் மாமன் தங்க மோதிரம் திட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசுக்கு எதிராக தவறான தகவலை தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பரப்பி வருவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி உள்ளது.

தமிழ்நாடு அரசின் ”தகவல் நம்பகத்தன்மை பிரிவு” வெளியிட்ட எக்ஸ் பதிவு:
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் தங்கம், ஒரு பைசாவுக்கு வழங்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தொடர்ந்து பேசி வருகிறார்.

இது முற்றிலும் தவறான தகவல்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்கத்தின் விலை தனியாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து, பேக்கிங் மற்றும் BIS தரமுத்திரை போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களும் சேர்த்து ரூ.0.01 என நிறுவனங்கள் குறைந்த விலைப்புள்ளியினை அளித்ததால் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.0.01 என்பது தவறான தகவலாகும். தவறான தகவலைப் பரப்பாதீர் ! . இவ்வாறு சிபிஐ முத்தரசனுக்கு எதிராக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
