திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சியின் உறுப்பினர்கள் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்ட வட்டாட்சியர் அய்யாசாமி அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியராக பணிபுரிந்த அய்யாசாமி அனுப்பிய சுற்றறிக்கையில், ”திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர்; முகவரி ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்த பகிரங்க சுற்றறிக்கையானது, கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் வருவாய் ஆய்வாளர்கள்; தலைமையிடத்து துணை வட்டாட்சியர்- மண்டல துணை வட்டாட்சியர்; பழனி வருவாய் கோட்டாட்சியர்; திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை குறித்து நமது மின்னம்பலத்தில் முதலில் செய்தி வெளியிட்டோம். தமிழகம் முழுவதும் வட்டாட்சியரின் இந்த சுற்றறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சுற்றறிக்கையை அனுப்பிய வட்டாட்சியர் அய்யாசாமி இரவோடு இரவாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎம் நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
