புலியைப் பிடிக்க முடியாதபட்சத்தில் மேல் நடவடிக்கை: அமைச்சர்

Published On:

| By Balaji

ஆட்கொல்லி புலிக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயல்கிறோம் என்றும் அது முடியாதபட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் டி23 என்ற புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. நான்காவது நபரைக் கொன்றதோடு மட்டுமின்றி அவரது உடல் பாகத்தையும் புலி தின்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் புலியைப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தமிழக-கேரள வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்படி புலியைப் பிடிக்கும் பணி நடந்து வருவதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று மசினகுடி பகுதிக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் புலி தாக்கி உயிரிழந்த முதியவர் மங்கள பஸ்வான் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து புலியைப் பிடிக்கும் பணியையும் அவர் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதலின்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வனத்துறையினர் புலியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை மட்டுமின்றி தேவன் எஸ்டேட், மே பீல்டு ஆகிய பகுதிகளிலும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிநவீன கேமராக்கள், துப்பாக்கிகள், நெட் கன், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. விரைவில் புலி சிக்கும் என நம்புகிறோம். புலிக்கு ஆபத்தில்லாமல் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அது முடியாதபட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். முதுமலை புலிகள் காப்பகம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் எல்லையில் உள்ளது.

ஒரு புலி ஒரே பகுதியில் இருக்காமல் மற்ற மாநிலங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஒரு நிமிடத்தில் புலியைச் சுட்டு விடலாம். ஆனால் தவறுதலாக வேறு ஒரு புலியைச் சுட்டு விடக்கூடாது. வேறு ஒரு புலிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது. எனவே அனைத்தையும் கருத்தில் கொண்டு எவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் புலியைப் பிடிப்போம். புலி தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

[டி23 புலிக்கு ஆயுள் தண்டனையா? மரண தண்டனையா?](https://minnambalam.com/politics/2021/10/03/19/tiger-t23-forest-department-continues-for-hunt)

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share