ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 45வது படத்திற்கு கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று (ஜூன் 20) அறிவிக்கப்பட்டுள்ளது. suriya 45 movie title announced
கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான ரெட்ரோ திரைப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.235 கோடியை வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா, சுவாசிகா, சிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். புதுமுகம் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது கருப்பு என படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் பலரையும் கவர்ந்து வருகிறது. கிராமத்து பின்னணியில் நாட்டார் தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்ட படமாக இருக்கும் என போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.
சிங்கம், என்.ஜி.கே., சூரரைப் போற்று, ரெட்ரோ ஆகிய படங்களில் சூர்யாவின் சொந்த ஊராக தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நெல்லை, விருதுநகர் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது கருப்பசாமி வழிபாட்டை கொண்டாடும் தென்மாவட்டங்களில் ஒன்றின் பின்னணியில் கருப்பு படமும் தயாராகி வருவதாக சூர்யா ரசிகர்கள் டீடெய்லிங் செய்து வருகின்றனர்.
