வீட்டில் பூரி செய்தால் சில நேரங்களில் நன்றாக உப்பாமல் போய்விடும். உப்பினாலும் சிறிது நேரத்தில் அமுங்கி, கடினமாக மாறிவிடும். இதற்கு மாவின் பதமும், பூரியைத் திரட்டும் விதமும், எண்ணெயின் சூடும் முக்கிய காரணங்கள். அதோடு ஒரு சின்ன பொருளை மாவில் சேர்த்தால் பூரி நன்றாக உப்பி, மென்மையாக இருக்குமாம்.
அந்த ரகசியப் பொருள் என்ன?
ஒரு கப் கோதுமை மாவுக்கு சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி ரவை சேர்க்கலாம். இதனுடன் சிறிதளவு உப்பு, ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவைப் பிசைய வேண்டும்.
மாவு எப்படி இருக்க வேண்டும்?
சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் தளர்வாக இருக்கக்கூடாது. பூரி மாவு சற்று கெட்டியாக இருக்க வேண்டும். மாவை பிசைந்தவுடன் சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சிறிது எண்ணெய் தடவி திரட்டலாம். மாவை நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை.
பூரியை மிகவும் மெல்லியதாகத் திரட்டாமல், எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீரான தடிமனில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எண்ணெயில் போட்டதும் உள்ளே காற்று பிடித்து நன்றாக உப்பும்.
எண்ணெய் சூடு தான் முக்கியம்!
பூரி போடும் எண்ணெய் நன்றாகக் காய்ந்திருக்க வேண்டும். எண்ணெய் மிதமான சூட்டில் இருந்தால் பூரி சரியாக உப்பாமல், அதிக எண்ணெயையும் குடித்துவிடும். பூரியை எண்ணெயில் போட்டதும் கரண்டியால் மேல்புறத்தில் லேசாக எண்ணெயை ஊற்றி அழுத்தினால், அது வேகமாகப் பந்து போல உப்பி வரும்.
பூரி உப்பியதும் ஒருமுறை மட்டும் திருப்பிப் போட்டு வேகவைத்தால் போதும். கூடுதல் மென்மைக்காக மாவில் சிறிதளவு தயிர் அல்லது பாலையும் சேர்க்கலாம்.
