முகத்தில் திடீரென தோன்றும் முகப்பரு, பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் பசை, அடைபட்ட சருமத் துளைகள், ஹார்மோன் மாற்றங்கள், சில மருந்துகள், தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் முகப்பரு உருவாகலாம். காரணத்தைப் புரிந்துகொண்டு சருமத்துக்கு ஏற்ற பராமரிப்பை மேற்கொள்வது முக்கியம்.
ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்
வீக்கத்துடன் இருக்கும் பருவில், ஐஸ் கட்டியை நேரடியாக வைக்காமல் மென்மையான துணியில் சுற்றி லேசாக ஒத்தடம் கொடுக்கலாம். இதேபோல் வெதுவெதுப்பான நீரில் நனைத்த சுத்தமான துணியை சுமார் 10 நிமிடங்கள் பருவின் மீது வைப்பதும் ஒரு எளிய வழியாக கூறப்படுகிறது.
ஆலோவேரா, டீ ட்ரீ ஆயில் உதவுமா?
வாசனை சேர்க்கப்படாத ஆலோவேரா ஜெல் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். டீ ட்ரீ ஆயிலை நேரடியாக முகத்தில் பயன்படுத்தக் கூடாது. அதை சரியான அளவில் நீர்த்துப் பயன்படுத்த வேண்டும்; இல்லையெனில் எரிச்சல் அல்லது வீக்கம் ஏற்படலாம். எந்த இயற்கை பொருளையும் முதலில் சிறிய பகுதியில் சோதித்துப் பார்ப்பது நல்லது.
உணவிலும் கவனம் தேவை
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், இனிப்பு பானங்கள், வெள்ளை பிரெட் போன்ற அதிக கிளைசெமிக் (Glycemic) உணவுகளை குறைப்பது உதவியாக இருக்கலாம். பழங்கள், கொட்டைகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பருவை கிள்ளாதீங்க!
முகப்பருவை அடிக்கடி தொடுவது அல்லது கிள்ளுவது அழற்சியை அதிகப்படுத்தி, பின்னர் தழும்புகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம். முகத்தை மென்மையாகக் கழுவி, வாசனை இல்லாத மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதுடன் SPF 30 சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதும் சருமப் பராமரிப்பில் முக்கியம். தொடர்ந்து அதிகமாகும் அல்லது வலியுடன் இருக்கும் முகப்பருவுக்கு சரும மருத்துவரின் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
