துணை நிராகரிப்பதாக உணர்கிறீர்களா? உறவில் சிக்கியிருக்கும் வலியை புரிந்துகொள்ளுங்கள்!

Published On:

| By Minnambalam Desk

உங்களின் துணை உங்களிடம் இருந்து விலகுவதாக உணர்வது, திருமண உறவில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தும்.

அருகில் இருந்தாலும் தனிமையாக இருப்பது போன்ற உணர்வு உருவாகலாம். ஆனால், ஒவ்வொரு விலகலும் அன்பின்மையின் வெளிப்பாடு என்று முடிவு செய்துவிட முடியாது.

ADVERTISEMENT

நிராகரிப்பின் பின்னால் இருக்கும் உணர்வு

உறவில் ஒருவர் நெருக்கத்தைத் தேடும் போது, மற்றொருவர் அமைதியாகவோ விலகியோ செயல்படலாம். நெருக்கம் குறைகிறது என்ற பயம் ஒருவரை மீண்டும் மீண்டும் பேசவும், விளக்கம் கேட்கவும் தூண்டும். அதே நேரத்தில், மற்றொருவருக்கு தான் துணையை ஏமாற்றிவிட்டோம் என்ற குற்ற உணர்வு அல்லது அவமானம் உருவாகி, மேலும் பின்வாங்கச் செய்யலாம்.

ADVERTISEMENT

இப்படியாக இருவரின் எதிர்வினைகளும் ஒன்றையொன்று தூண்டி, ஒரே சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்கிறது.

அமைதியின் பின்னால் அன்பின்மையா?

ADVERTISEMENT

துணையின் மௌனத்தை அலட்சியம் என்று உடனடியாக புரிந்துகொள்வது பிரச்சினையை பெரிதாக்கலாம். சில நேரங்களில் அந்த அமைதிக்குள் தோல்வியடைந்துவிட்டேன் என்ற பயமும் இருக்கலாம்.

“ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” என்று கேட்பதற்குப் பதிலாக, “இப்போது உனக்குள் என்ன நடக்கிறது?” என்று கேட்பது உரையாடலுக்கு வேறு பாதையைத் திறக்கலாம்.

முதலில் மாற்ற வேண்டியது எது?

துணையின் ஒவ்வொரு செயலையும் ஆராய்வதை விட, அந்த நேரத்தில் தனக்குள் என்ன உணர்வு எழுகிறது என்பதை கவனிப்பது முக்கியம். கோபம், பயம், தனிமை அல்லது நிராகரிக்கப்பட்ட உணர்வு எதுவாக இருந்தாலும், அதை அடையாளம் காண வேண்டும்.

பிரச்சினை தீவிரமாக இருக்கும் நேரத்தில் வாதிடுவதற்குப் பதிலாக, இருவரும் அமைதியாக இருக்கும் தருணத்தில் உறவில் மீண்டும் மீண்டும் நடக்கும் இந்தச் சுழற்சியைப் பற்றி பேசுவது உதவியாக இருக்கலாம்.

குற்றம் சாட்டாமல் நெருக்கத்தை உருவாக்குவது எப்படி?

“நீ எனக்காக நேரம் செலவிடுவதில்லை” என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, “உன்னிடம் இருந்து விலகி இருப்பதாக உணரும்போது எனக்கு பயமாகிறது. அதனால் நான் கோபமாகப் பேசிவிடுகிறேன்” என்று சொல்வது உணர்வை நேரடியாக வெளிப்படுத்தும்.

திருமணத்தில் பிரச்சினையை உருவாக்குவது எப்போதும் ஒருவர் மட்டுமல்ல. இருவருக்குள் இருக்கும் ஒரு தயக்கமும், பயமும் தான்  ஒரு உறவில் பல நேரங்களில் தடையாக இருக்கிறது. அந்த முறையை இருவரும் அடையாளம் கண்டு மாற்ற முயற்சிக்கும்போது, மீண்டும் உண்மையான நெருக்கத்துக்கான வாய்ப்பு உருவாகும்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share