இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு இன்று கடைசி நாள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4-ந் தேதி தொடங்கியது. இந்தப் பணிகள் இன்று டிசம்பர் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
2025-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதியின் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,96,46,143 கணக்கெடுப்பு படிவங்கள் (99.98%) இதுவரை (2025 டிசம்பர் 10) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,096 வாக்குச் சாவடி அலுவலர்கள், 12,43,716 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,10,380 கணக்கெடுப்பு படிவங்கள் (99.99%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,40,83,413 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் (99.95%) செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,571 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,21,571 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு இன்று கடைசி நாள். இதனையடுத்து டிசம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தங்கள் மேற்கொள்ள பார்ம் 6-ல் பூர்த்தி செய்து தர வேண்டும்.
