பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் தொழில்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 1, 2026 தேதியிட்ட அந்த அரசாணையில்,”மதுரமங்கலத்தில் சிப்காட், தொழில்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது. நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் அமைப்பின் மேலாண்மை இயக்குநரால் நிர்வகிக்கப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும். மொத்தம் 8.3820 ஹெக்டேர் நிலம் தொழில் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்படுகிறது. கையகப்படுத்தப்படும் நிலத்தின் வரைபடங்களை காஞ்சிபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு வட்டாட்சியர் (நில எடுப்பு) அலுவலகங்களில் வேலை நாட்களில் நேரில் பார்வையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் துறையில் அதிகரித்து வரும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் இத்தொழிற்பூங்கா உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரமங்கலம் என்பது பரந்தூருக்கு அருகே இருக்கும் கிராமம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முந்தைய அரசின் திட்டத்தை முதல்வர் விஜய் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்தநிலையில் பரந்தூருக்கு அருகிலேயே விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
