கோலிவுட்டை உலுக்கிய புதிய தகவல்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் தங்களின் அடுத்த படத்திற்காக (AK64) இணையவுள்ளது அதிகாரப்பூர்வமாகத் தெரிந்ததே. இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கடந்த சில மாதங்களாக இதன் தயாரிப்பாளர் யார் என்பதில் பெரிய குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், அஜித்தின் மனைவியும் முன்னாள் முன்னணி நடிகையுமான ஷாலினி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘ஏகே 64’ திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களைப் பெரும் சர்ப்ரைஸில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தயங்கியதற்கு அஜித்தின் சம்பளமே காரணமா?
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ‘ஏகே 64’ படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. எனினும், நடிகர் அஜித் குமார் இப்படத்திற்கு ரூ.150 கோடிக்கும் அதிகமாகச் சம்பளம் கேட்டதால், தற்போதைய சூழலில் அவ்வளவு பெரிய பட்ஜெட்டை முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் தயக்கம் காட்டியதாகத் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது. சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூட, அஜித் எதிர்பார்க்கும் தொகையை வழங்கக்கூடிய தயாரிப்பாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், அனைத்துச் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஷாலினி தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
பிரம்மண்டமான ஆக்ஷன் கதையில் ஆதிக் ரவிச்சந்திரன்
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான மாஸ் படமாக அமைந்த நிலையில், இந்த ‘ஏகே 64’ திரைப்படம் அதையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸையும் கவரும் வகையில், நகைச்சுவை கலந்த ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாகவுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கடந்த சில தசாப்தங்களாக கேமரா முன் தோன்றாமல் இருந்த ஷாலினி, தற்போது தன் கணவரின் படத் தயாரிப்பை முன்னின்று கவனிப்பதுடன், திரைப்படத் தயாரிப்பில் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட்டில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தற்போது நடிகர் அஜித் குமார் தனது ‘Ajith Kumar Racing’ அணியுடன் சர்வதேச கார் பந்தயத் தொடர்களில் பிஸியாக பங்கேற்று வருகிறார். பந்தய ஆஃப்-சீசனில் மட்டுமே அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்பதால், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாலினியின் முதல் தயாரிப்பு என்பதால், நிச்சயம் இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகச் சிறந்த மற்றும் தரமான ஒரு பிளாக்பஸ்டர் கதையாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
