திபெத்தை ஒட்டியுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பல கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்து சென்றது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப் பாய்ந்த ராட்சத அலை குடிவரவு அலுவலகத்தை மூழ்கி சேதப்படுத்தியதோடு, போட் கோஷி ஆற்றங்கரையிலும் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளனர்.
சத்குருவின் ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்ற கைலாஷ் குழுவும் இந்த வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில், ”திபெத் – சீன எல்லையில் உள்ள கைரோங் (Gyirong) என்ற இடத்தில் திடீரெனக் கொடூர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கைலாஷ் யாத்திரை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்த எங்கள் குழுவினர் அங்கிருந்த குடிவரவு அலுவலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
அந்தப் கட்டிடமும் நகரத்தின் பெரும்பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியதாகத் தெரிகிறது. இந்தசூழலில் தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவுக் குழுக்கள் உட்பட அனைவரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம்.
குடிவரவு அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரைப் பற்றியும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. அந்த இடத்திற்குச் செல்ல முடியுமா என்று அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எத்தகைய அபாயம் இருந்தாலும் மீட்புப் பணிகளில் பங்கேற்கத் தயாராக உள்ளோம்.
நமது யாத்திரையின் ஒரு பகுதியாக உள்ள 21 குழுக்களில், 495 பேர் ஏற்கனவே பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். 743 பேர் தற்போது திபெத்திலும், 148 பேர் நேபாளத்திலும், 77 பேர் குடிவரவு மையத்திலும், 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் திமுரேயிலும் உள்ளனர்.
இந்த மிகக் கடினமான நேரத்தில் நாங்கள் எந்த முயற்சியையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து செயல்படுகிறோம். இந்தச் சூழ்நிலையில் சிறந்த முறையில் செய்யக்கூடியவற்றை உறுதிப்படுத்த நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பகுதியில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
