செந்தில் பாலாஜி தம்பி முன் ஜாமீன் கோரிய வழக்கில், 3 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அப்போது கரூரில் உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் காரை மறித்து சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் உள்ளிட்டார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சமீபத்தில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த வழக்குக்காக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கரூரில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியதாகவும், அவர்களிடமிருந்து ஐந்து பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதாகவும் வருமானவரித்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணா காந்த் அளித்த புகாரின் பேரில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி மாறி இருக்கும் நிலையில் தன்னை அரசியல் நோக்கத்துடன் வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும். விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறேன். எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ” 2023 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த போது அசோக்குமார் சம்பவ இடத்திலேயே இல்லை. பிரச்சினையை தூண்டினார் என்பதற்காக மட்டுமே அவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், இது தொடர்பாக பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கில் என்ன நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது நடவடிக்கை எடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
