தலையில் அரிப்பு, வெள்ளை செதில்கள், பொடுகு போன்ற பிரச்சினைகள் இருந்தால், பெரும்பாலானவர்கள் அதை சாதாரண பொடுகு என்று நினைத்துவிடுவார்கள்.
ஆனால், சிலருக்கு இவை ஸ்கால்ப் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் (Scalp Yeast Infection) அல்லது பூஞ்சைத் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இந்தத் தொற்று பொதுவாக கேண்டிடா (Candida) என்ற ஈஸ்ட் வகை பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படுகிறது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இது குணமாகும். ஆனால், கவனிக்காமல் விட்டால் முடி உதிர்வு, மயிர்க்கால்கள் பாதிப்பு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ஸ்கால்ப் ஈஸ்ட் தொற்று ஏன் ஏற்படுகிறது?
நமது சருமத்தில் இயற்கையாகவே பல வகையான நுண்ணுயிர்களும் ஈஸ்ட்களும் வாழ்கின்றன. ஆனால், உடலின் இயல்பான சமநிலை பாதிக்கப்படும்போது கேண்டிடா பூஞ்சை வேகமாகப் பெருகி தொற்றை ஏற்படுத்தும்.
வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல், அதிக வியர்வை, சில கடுமையான ஹேர் கேர் பொருட்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு, நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் அதிக மனஅழுத்தம் போன்றவை இந்தத் தொற்றின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
என்னென்ன அறிகுறிகள் தோன்றும்?
ஸ்கால்ப் ஈஸ்ட் தொற்றின் முக்கிய அறிகுறி கடுமையான அரிப்பு. அதோடு, பொடுகைப் போல வெள்ளை செதில்கள், சிவப்பு அல்லது ஊதா நிற திட்டுகள், மஞ்சள் அல்லது வெள்ளை நிற எண்ணெய்ப் பசை கொண்ட படிவங்கள், சிறிய சீழ் நிறைந்த பருக்கள் போன்றவையும் தோன்றலாம்.
சிலருக்கு தோல் வெடிப்பு, மேலோடு உருவாகுதல் மற்றும் தற்காலிகமாக முடி உதிர்வதும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் பொடுகு அல்லது சொரியாசிஸ் போன்ற பிரச்சினைகளுடன் ஒத்திருக்கலாம் என்பதால், சரியான பரிசோதனை அவசியம்.
பொடுகுக்கும் இந்தத் தொற்றுக்கும் என்ன வித்தியாசம்?
சாதாரண பொடுகு பெரும்பாலும் வெள்ளை செதில்களுடன் மட்டும் இருக்கும். ஆனால், ஈஸ்ட் தொற்றில் அரிப்பு அதிகமாக இருப்பதுடன், சிவத்தல், வீக்கம், சீழ் நிறைந்த பருக்கள் அல்லது மேலோடு உருவாகுதல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
தொடர்ச்சியாக முடி உதிர்வது அல்லது அரிப்பு பல வாரங்களாக நீடிப்பதும் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறியாகும்.
சிகிச்சை எப்படி இருக்கும்?
பெரும்பாலானவர்களுக்கு பூஞ்சை எதிர்ப்பு (Antifungal) ஷாம்புகள், கிரீம்கள், நுரை மருந்துகள் அல்லது களிம்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொற்று கடுமையாக இருந்தால், மருத்துவர் வாய்வழி பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.
பொதுவாக சிகிச்சையைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் குறைய ஆரம்பிக்கலாம். ஆனால் சிலருக்கு முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். மருத்துவர் கூறிய காலம் முழுவதும் மருந்தைப் பயன்படுத்துவது முக்கியம்.
வீட்டில் என்னென்ன கவனிக்க வேண்டும்?
சிகிச்சையுடன் சேர்த்து தலையை சுத்தமாகவும் உலர்ந்தும் வைத்திருப்பது அவசியம். தலைமுடியை நனைத்தபடியே நீண்ட நேரம் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தொப்பி, ஹெல்மெட் அல்லது ஸ்கார்ஃப் போன்றவற்றை நீண்ட நேரம் தொடர்ந்து அணிவதைக் குறைப்பதும், அதிக வியர்வை ஏற்பட்டால் தலைமுடியைச் சுத்தம் செய்வதும் தொற்று மீண்டும் வராமல் தடுக்க உதவும்.
வீட்டுவைத்தியங்களை மட்டும் நம்பலாமா?
தேங்காய் எண்ணெய், ஆப்பிள் சிடர் வினிகர், எசென்ஷியல் ஆயில் போன்ற பல வீட்டுவைத்தியங்கள் இணையத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தும் வலுவான மருத்துவ ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை.
எனவே, வீட்டுவைத்தியங்களை மட்டும் நம்பாமல், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளே இந்தத் தொற்றுக்கான முக்கிய சிகிச்சை என்பதை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
அரிப்பு பல வாரங்களாகக் குறையாமல் இருந்தாலோ, தலையில் சிவப்பு திட்டுகள், சீழ், அதிக முடி உதிர்வு அல்லது கடுமையான வலி ஏற்பட்டாலோ தோல் மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில், பொடுகு, சொரியாசிஸ், ரிங்வோர்ம், ஈஸ்ட் தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஒரே மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சரியான காரணத்தைக் கண்டறிந்த பிறகே பொருத்தமான சிகிச்சையைத் தொடங்க முடியும்.
