பி.டி.அரசகுமார் மீது குண்டாஸ் போட்டது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பதிவு பெறாத சங்கத்தின் தலைவரான பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஜூலை 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “2024 – 25-ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவத்துக்கு 2026 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை. அரசியல் உள்நோக்கம் கொண்டவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது பிடி அரசகுமாரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
