Raids at 30 Places Linked to K.N. Nehru: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுடன் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 241 ஆவணங்கள், மின்னணு சான்றுகளை பறிமுதல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள், அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செப்டம்பர் 5-ந் தேதி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு இயக்ககத் தலைமையகத்தில் குற்ற எண். 7/2026, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 120பி, 406, 409, 420 மற்றும் பிஎன்எஸ் (BNS), 2023 பிரிவு 61(2), 316(2), 316(5) மற்றும் 318(4) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7, 7ஏ, 8, 9, 12, 13(2) மற்றும் 13(1)(அ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் ஒரு பகுதியாக, 05.09.2026 தேதியன்று சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையின் போது, டெண்டர்களில் செய்யப்பட்ட முறைகேடுகள் தொடர்பான 241 குற்றச்சாட்டுக்குரிய ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
