Rahul to Make Vijay as PM: 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின் முதல்வர் விஜய்யை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே பிரதமர் இருக்கையில் உட்கார வைப்பார் என்று தவெகவைச் சேர்ந்த ஜோதிடரான கனிமொழி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
தலைமை செயலக வளாகத்தில் இன்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் ஜோதிடரான த.வெ.க.வின் எம்.எல்.ஏ. கனிமொழி கூறியதாவது: 2029 பிரதமர் வேட்பாளர் தலைவர் தளபதிதான். 2025-ல் இதே மாதிரி வந்து என்கிட்ட கேட்டாங்க. நான் அப்பவே 2026-ல் என்ன நடக்கும்னு சொன்னேன். அதுதான் நடந்தது.
2029-ல் பிரதமர் யார்? என்பதை டெல்லியில இருந்து முடிவு செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்துதான் முடிவு செய்யப்படும். 2029-ல் கண்டிப்பாக இதை பார்ப்போம்.
2029-ல் அப்படி நடந்த பின்னரே கூட்டணியில் காங்கிரஸ் உள்ளே இருக்குமா? வெளியே இருக்குமா? என்பது தெரியும். விஜய்யை முதல்வர் இருக்கையில் உட்கார வைத்ததே ராகுல் காந்திதான். அதே ராகுல் காந்திதான் 2029-ல் விஜய்யை பிரதமர் நாற்காலியில் உட்கார வைப்பார். 2025-ல் நான் கணித்தது 2026-ல் நடந்தது. அதனால் 2029-ல் இதுதான் நடக்கும். இவ்வாறு கனிமொழி எம்.எல்.ஏ. கூறினார்.
காங்கிரஸ் ரியாக்ஷன் என்ன?
அதே நேரத்தில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ, “ ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார். இப்ப உள்ள தவெக எம்.எல்.ஏ.க்கள் புதியவர்கள். அவர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறவர்கள். அவர்களைக் கேட்டால் அவங்க தலைவர்தான் அடுத்த பிரதமர் என சொல்வார்கள். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என முதல்வர் விஜய் தெளிவாகவே சொல்லிவிட்டார்” என்றார்.
