நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் பொதுமக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக கல்வி மற்றும் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். பண்டிகை நாட்களில் பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேசமயம் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் பல தரப்பினர் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இநத நெருக்கடியை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வருகின்றனர். சாதாரண நாட்களில் ரூ.1,000 வரை விற்பனையாகும் டிக்கெட் ஒன்றுக்கு ரூ.4,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி தரும் கட்டண கொள்ளை

சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து கோவை வர ரூ.1500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்படும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ.4418 வரை வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் சென்னையில் இருந்து திருப்பூருக்கு அதிகபட்சமாக ரூ.2,460 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து ஈரோடு செல்வதற்கு அதிகபட்சமாக ரூ.3,937க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து தொழில் நகரமாக கோவையில் தங்கி பணியாற்றுபவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவையில் இருந்து மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.2,645 வரை வசூலிக்கப்படுகிறது.
இதேபோல் கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக ரூ.4,000 வரை வசூலிக்கப்படுகிறது. கோவையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3,700 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள பல பகுதிகளிலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பண்டிகைக்கு ஊருக்கு செல்வதே குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இந்த கட்டண உயர்வை பார்க்கும் போது ஊருக்கு செல்லவே அச்சமாக உள்ளது என கூறுகின்றனர். மேலும் அரசு தலையிட்டு இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
