திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது பற்றி திருமாவளவன் பேசியது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “நீண்ட காலம் திமுகவோடு பயணித்தவர்கள் போட்டியிட, தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, திடீரென கட்சியில் சேர்ந்த ஒரு கட்சிக்கு யாரும் எதிர்பாராத எண்ணிக்கையைத் தந்தபோது, அந்த கூட்டணியில் நீண்ட காலம் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 14) சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “வரும் 16ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் இதற்கான தெளிவான பதிலை சொல்கிறேன்” என்றார்.
இடைத்தேர்தல் தொடர்பாக பேசிய அவர், “திமுக வேட்பாளர்கள் பரந்தாமனையும் சுகன்யாவையும் ஆதரிக்க வேண்டும் என்று அண்ணன் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் என்னை சந்தித்து ஆசி பெற்றனர். நிச்சயமாக திமுகவுக்கு 100% வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுவது அவர்கள் விருப்பம். கண்டிப்பாக இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வேன்” என்று கூறினார்.
