உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜாவை, கவிஞர் வைரமுத்து சந்தித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் மூத்த இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அவரது மகன் மனோஜ் கூறுகையில், வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனைக்காகவே அப்பா மருத்துவமனைக்குச் சென்றார்.
சோதனையின் போது உப்பின் அளவு , நீர்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சில நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறினர்.
அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அப்பாவின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
பாரதிராஜா – வைரமுத்து சந்திப்பு!
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாரதிராஜாவை, பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து நேரில் சென்று பார்த்துள்ளார்.
மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் இந்த சந்திப்பை கவிதை வடிவில் குறிப்பிட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
அவரது டிவிட்டர் பதிவில், ’மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை.
சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார். கலையுலகை ஆண்டு வருவார்.’ என்று கூறப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாடவில்லை!
இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, தாஜ்மஹால், கடல் பூக்கள், தமிழ்ச் செல்வன் உட்பட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளவர் கவிஞர் வைரமுத்து.
திரையுலகில் தற்போது மூத்த கலைஞர்களாக இருக்கும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இதற்கிடையே பாரதிராஜாவின் பிறந்தநாளான நேற்று கொண்டாட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தனுஷின் தாத்தாவாக அவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
