BRICS Summit: டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில் சமஸ்கிருத ஸ்லோகத்தை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கருத்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
18-வது பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு இன்று (செப்டம்பர் 12) டெல்லியில் தொடங்குகிறது. பிரிக்ஸ் நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிப்பதால் டெல்லியில் இம்மாநாடு நடைபெறுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்-ஐ, டெல்லியில் நேற்று பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். புடினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழி பெயர்ப்பு நூலை பிரதமர் மோடி வழங்கினார்.
இதனிடையே பிரதமர் மோடி சமஸ்கிருத ஸ்லோகத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “ஒரு நபர் எப்பொழுதும் நல்ல பண்புகளைக் கொண்ட நபர்களிடையே வாழ்ந்து அவர்களது நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சமஸ்கிருத நீதிமொழி உணர்த்துகிறது. பரஸ்பர நல்லெண்ணம், நட்புறவு ஆகியவை அமைதி, ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன. எனவே கலந்துரையாடல்களில் நற்பண்பு கொண்ட நபர்களுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.
