“தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம்” என்பது பழைய பழமொழி. ஆனால், “தினமும் ஒரு முறை அன்பானவர்களைக் கட்டிப்பிடித்தால் போதும், மனக்கவலை காணாமல் போய்விடும்” என்பதுதான் இப்போதைய அறிவியல் உண்மையாக உள்ளது.
சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவல், உடல் ரீதியான தொடுதல் (Physical Touch) என்பது வெறும் உணர்வுபூர்வமானது மட்டுமல்ல, அது நமது உடல் ஆரோக்கியத்தோடும் நேரடியாகத் தொடர்புடையது என்பதை வலியுறுத்துகிறது.
தொடுதலின் மகிமை (Power of Touch): ஆய்வுகளின்படி மசாஜ் செய்வது (Massages), இருக்கக்கட்டித் தழுவுவது (Hugs), மற்றும் கைகோர்த்து நடப்பது (Hand-holding) ஆகியவை நம் உடலில் பெரிய மாற்றங்களை உண்டாக்குகிறது.
- மன அழுத்தம் குறையும்: நாம் நமக்குப் பிடித்தவர்களைத் தொடும்போதோ அல்லது கட்டிப்பிடிக்கும்போதோ, நம் மூளையில் ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதை ‘லவ் ஹார்மோன்’ (Love Hormone) என்றும் அழைப்பார்கள். இது உடலில் உள்ள மன அழுத்தத்தை உண்டாக்கும் ‘கார்டிசோல்’ அளவைக் குறைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு விஷயம், கட்டிப்பிடி வைத்தியம் நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை (Immune System) வலுப்படுத்தும் என்பதுதான். மன அழுத்தம் குறைந்தாலே, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது. அடிக்கடி அன்பான தொடுதலைப் பெறுபவர்களுக்கு வைரஸ் தொற்றுகள் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
டிஜிட்டல் உலகமும் தனிமையும்: இன்றைய அவசர உலகில், நாம் ஸ்மார்ட்போன்களைத் தொடும் அளவுக்குக் கூட, நம் வீட்டில் உள்ள மனிதர்களைத் தொட்டுப் பேசுவதில்லை. கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் சிறு சிறு ஊடல்களைக் கூட, ஒரு சின்ன அணைப்பு சரி செய்துவிடும். வார்த்தைகளால் சொல்ல முடியாத ஆறுதலை, கைகளை இறுகப் பற்றிக்கொள்வது சொல்லிவிடும்.
உடல் ஆரோக்கியம் என்பது ஜிம்முக்கு போய் ஒர்க்-அவுட் செய்வதில் மட்டும் இல்லை; அது மன மகிழ்ச்சியிலும் இருக்கிறது. எனவே, ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும்போது மருந்து மாத்திரைகளைத் தேடுவதை விட, உங்கள் அன்புக்குரியவர்களை ஒருமுறை கட்டிப்பிடித்துப் பாருங்கள். அது கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் வேற லெவல்!
