திமுக நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 15), “தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என முதல்வர் ஸ்டாலின் உறுதியேற்றுள்ளார்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா.
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உறுதி மொழி

மேலும் தமிழ்நாடு முழுவதும், 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் வாரியாக, திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து, அந்தந்த பகுதிகளில் ‘தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டோம்’ என உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதன்படி தமிழ்நாடு முழுவதும் உறுதிமொழியேற்கப்பட்டது.
