சில குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக பெற்றோர் தூங்க வைக்க முயற்சி செய்தாலும் கூட தூங்குவதற்கு அடம் பிடிக்கும் குழந்தைகள் உள்ளன. குழந்தையை தூங்க வைத்துவிட்டு ஓய்வு எடுக்க நினைக்கும் பெற்றோருக்கு இது சலிப்பை ஏற்படுத்தலாம். எதை செய்தாலும் குழந்தைகள் தூங்க மறுப்பதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலைதான் பெற்றோருக்கு உள்ளது. இந்த நிலையில் குழந்தைகளை ஐந்து நிமிடங்களில் தூங்க வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் தூங்கவைக்க வேண்டும்
ஐந்து நிமிடங்களில் குழந்தைகளை தூங்க வைக்க, பெற்றோர்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் குழந்தைகளை தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது மிக அவசியம். மேலும், படுக்கைக்கு முன் குழந்தைக்கு செல்போன், டிவியை காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தை தூங்கும் போது, அறை விளக்குகளை முழுமையாக அணைக்க வேண்டும் அல்லது மிகவும் மங்கலாக வைத்திருக்க வேண்டும்.
பெற்றோர் செல்போன் பயன்படுத்தாதீர்கள்
குழந்தைகள் விரைவாக தூங்க உதவ, பெற்றோர்கள் அறையில் எந்த சத்தமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் செல்போன்களை அமைதியாக வைத்திருக்க வேண்டும். நோட்டிபிகேஷன் சத்தம் வருவதைக் கூட அணைத்து வைக்க வேண்டும். குழந்தையின் முதுகில் மெதுவாகத் தட்டுவதும் அவர்கள் விரைவாக தூங்குவதற்கு உதவியாக இருக்கும்.
அறை வெப்பநிலையை சரியாக இருக்க வேண்டும்
குழந்தை உறங்குவதற்கு அறையின் வெப்பநிலை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். ஏனெனில் இது சரியான தூக்கத்தை ஊக்குவிக்கும். பெற்றோர்கள் இந்த விஷயங்களை மனதில் வைத்திருந்தால், அவர்கள் தங்கள் குழந்தையை ஐந்து நிமிடங்களுக்குள் தூங்க வைக்கலாம்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தல்
மாலை குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும். பிறகு 8 மணிக்கெல்லாம் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட வேண்டும். இதற்குப் பால் கொடுக்கால் உடனே குழந்தை தூங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளுதல்
குழந்தைகளுக்கு உணவுடன் தயிர் சேர்த்து ஊட்டிவிடுதல் நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஏனெனில் தயிரின் இனிமையான மற்றும் அமைதியான தன்மை குழந்தைகளுக்கு தூக்கம் வர வைக்கும். தயிரை தொடர்ந்து பயன்படுத்திவர குழந்தைகளுக்கு நல்ல இரவு உறக்கம் கிடைக்கும்.
குழந்தைகளை தூங்க கட்டாயப்படுத்தக் கூடாது
குழந்தைகளை வலுக்கட்டாயமாக தூங்க வைக்கக் கூடாது. குழந்தைகள் தூங்காமல் இருப்பதால் திட்டுவதும், கத்துவதும் கூட எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் பெற்றோருக்கு பயந்து தூங்கச் செல்வதால் நல்ல உறக்கம் கிடைக்காது. தூங்க செல்லும் முன் குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்சிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் நன்றாக உறங்குவார்கள்.
