பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த மோசடி வழக்கில் 3 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு தனிநபர்களுக்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான, தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாகப் பயன்பாட்டில் இருக்கும் 1.35 ஏக்கர் நிலம் பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால் இந்த நிலத்துக்கு தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று கூறி சேதுபதி மற்றும் வெள்ளைதுரை ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவைக் காட்டி, பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உதவியுடன் கடந்த ஜூலை 6-ந் தேதி அந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், இந்த மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்த விசாரணையில் தலைமறைவாக இருந்த 3 பேர் இன்று அதிகாலை 3 மணிக்கு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
- திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் பகுதியை சேர்ந்த வெள்ளதுரை
- விழுப்புரம் சாலாமேடு முருகதாஸ்
- அன்வர்தீன்
ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
