நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவத்தில் சிக்கிய 750-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியவில்லை.
திபெத் எல்லையில் நேற்று ஆகஸ்ட் 26-ந் தேதி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 4.4 அல்லது 5.2 அலகுகளில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் பனிப் பாறைகள் சரிந்தன. இந்த பனிப்பாறைகள் சரிந்து ஆறுகளை அடைத்துக் கொண்டன. ஆறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர பெருவெடிப்பு ஏற்பட்டது போல அடைப்புகள் உடைந்து நதிகளில் வெள்ளம் சுனாமி பேரலை போல பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்தது.
இந்த பெரும் சீற்றத்துடன் பாய்ந்த ஆற்று வெள்ளம் பல கிராமங்களை மூழ்கடித்துக் கொண்டது. கைலாய யாத்திரைக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகளையும் இந்த பெருவெள்ளம் விட்டுவைக்கவில்லை.
தற்போதைய நிலவரப்படி இந்த பெருவெள்ளப் பேரழிவில் சிக்கி 157 பேர் பலியாகி உள்ளனர். 133 இந்தியர்கள் உட்பட 750 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

நேபாள அரசு முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவும் உதவிக் கரம் நீட்டி உள்ளது. இந்தியாவின் நிவாரணப் பொருட்களுடன் விமான படைகள் நேபாளத்தில் முகாமிட்டுள்ளன.
இப்பெருவெள்ள பேரழிவின் பலி எண்ணிக்கை மிக மிக அதிகமாக உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
