நீட் விவகாரத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தம்மிடம் வெளிப்படையாக தெரிவித்ததாக பாடகர் ’தெருக்குரல்’ அறிவு விவரித்துள்ளார்.
நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்; நீட் மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இன்று ஜூலை 23-ந் தேதி போராட்டம் நடைபெற்றது.
இதில் பாடகர் ’தெருக்குரல்’ அறிவு பேசுகையில், “சென்னையில் தலைமைச் செயலகம் முன்பாக நீட் எதிர்ப்புக்கு முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தினேன். அப்போது என்னை தலைமைச் செயலகத்துக்குள் அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கே என்ன பேசப்பட்டது என்ற விவரத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை.
அன்று நான் முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைத்தான் அன்று நான் சந்தித்தேன்.
நீட் பற்றி ஆதவ் அர்ஜூனா கூறும் போது, “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அப்படி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. இதுதான் நிலைமை. பிறகு ஏன் நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள்? இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்” என எனக்கு அறிவுரை தந்தார்.
முதல்வரை சந்தித்ததால் மட்டும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது எனக்கு தெரியும். மக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட வேண்டியது அவசியம். அதனால்தான் மக்கள் நீட் விவகாரத்தை கையில் எடுத்து போராடுகிறார்கள்” என்றார்.
