எவ்வளவுதான் முயன்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட முடியவில்லையா.. சில குறிப்புகளை ஃபாலோ செய்து பார்க்கலாம் வாருங்கள்.
இப்போதைய இளைஞர்களின் பெரிய பிரச்சனையாக பொடுகு தொல்லைதான் உள்ளது. பருவநிலை மாற்றங்கள், முடியை பராமரிக்காதது, தூசியின் தாக்கத்தால் ஏற்படும் மாசு, மன அழுத்தம் மற்றும் உச்சந்தலையைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை பொடுகு பிரச்சனைக்குக் காரணமாக உள்ளன. பொடுகினால் (dandruff) உச்சந்தலையில் அரிப்பு, முடி உதிர்தல் மற்றும் வெள்ளையான செதில்கள் கொட்டுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலர் இதிலிருந்து விடுபட விலை உயர்ந்த ஷாம்பு, கண்டீஷனர்களை நாடுகின்றனர். அதே சமயம் சில எளிமையான வீட்டு வைத்தியங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொடுகு தொல்லையை குறைக்கும் வீட்டு வைத்தியங்கள் குறித்துப் பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை
தேய்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை கலவை பொடுகைக் குறைக்க உதவி புரிகிறது. சிறிதளவு எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலக்க வேண்டும். அதனை உங்கள் கைகளால் (Coconut oil and lemon for hair) உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, மென்மையான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வரை பொடுகு பிரச்சனை தீர்ந்து முடி உதிர்தலும் குறைந்துவிடும்.
பொடுகை கட்டுப்படுத்தும் தயிர்
ஆரோக்கியமான கூந்தலுக்கு தயிர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி5 மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. தயிரில் உள்ள (curd control dandruff) இயற்கையான பொருட்கள் உச்சந்தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து, பொடுகைக் குறைக்க உதவுகின்றன. உங்கள் தலைமுடியில் தயிரைப் பூசி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு, பின்னர் அலசி விடுங்கள். இதேபோல தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பொடுகை குறைத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
கற்றாழை ஜெல்
கற்றாழை அதன் இதமான, ஈரப்பதமூட்டும் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. கற்றாழை எரிச்சலைத் தணித்து, அழற்சியைக் குறைத்து, பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகளால் (Aloe vera gel dandruff) ஏற்படும் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜெல் போன்று பதமாக இருப்பதால் கற்றாழையை முடியில் அப்ளை செய்வதும் எளிது. கற்றாழை ஜெல்லைப் பிரித்தெடுத்து, அதை நேரடியாக உச்சந்தலையில் தடவ வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வரை நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெந்தயம் ஹேர் மாஸ்க்
வெந்தய விதைகளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இவை பொடுகு மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. வெந்தய விதைகளிலிருந்து (Fenugreek hair mask) தயாரிக்கப்பட்ட பசையை உச்சந்தலையில் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை அதிகரித்து, செதில் உதிர்தலைக் குறைக்கலாம். வெந்தய விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, அவற்றை விழுதாக அரைத்து, உங்கள் உச்சந்தலையில் தடவவும். சிறிது நேரம் கழித்து உங்கள் தலைமுடியை அலசவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முடியில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே காணலாம்.
வேப்ப இலைகள்
வேப்ப இலைகளில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா (Neem leaves) எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இவை பொடுகு மற்றும் உச்சந்தலை எரிச்சலைத் திறம்படக் குறைக்கின்றன. வேப்ப இலைகளை அறைத்து முடியில் பூசி சற்று நேரம் விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
இதேபோல உங்கள் உச்சந்தலையையும் சருமத்தையும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க, நிறைய தண்ணீர் குடிக்க (drink water) வேண்டும். உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு துத்தநாகம், பி வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுக்குக் காரணமாக அமையக்கூடிய மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
